பெரியகுளத்தில் ரூ.50 லட்சத்துடன் மாயமான ஓ.பி.எஸ். ஆதரவாளரின் கார் டிரைவர்
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை நடத்தி வருகிறார்.
இவர ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர். ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரின் கார் டிரைவராக பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
உசிலம்பட்டியில் இருந்து ஸ்ரீதர் மற்றும் நாராயணன், நண்பர் ஒருவரின் ரூ.50 லட்சம் பணத்துடன் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் ஆண்டிபட்டியில் நாராயணன் ஸ்ரீதரிடம் காரில் உள்ள ரூ.50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறி விட்டு தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகானின் காரில் பெரியகுளம் நோக்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீதர் ரூ.50 லட்சம் பணத்துடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணன் பல இடங்களில் தேடி பார்த்தும் ஸ்ரீதரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தனது கணவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஸ்ரீதரின் மனைவி கெங்கம்மாள் பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து பணத்துடன் மாயமான ஸ்ரீதரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.