செய்தியாளர்களை மிரட்டிய அமைச்சர்: முதல்வரின் நடவடிக்கை என்ன…??
திருவள்ளூர்: திருவள்ளூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களை பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஒருமையில் அநாகரிகமான முறையில் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத் துறை அமைச்சருமான நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பாராட்டி பரிசு அளித்து கவுரவித்தனர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பேசிய போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் கோபமடைந்த அமைச்சர் ஆவடி நாசர்,ஒளிப்பதிவு செய்த ஊடக ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர்களை ஒருமையில் அநாகரிகமான முறையில் மிரட்டினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர் சந்திப்பிலும் கேள்வி கேட்ட செய்தியாளரை ஒருமையில் பேசி அடக்கினார். அமைச்சரின் இந்த செயல்பாடுகளுக்கு ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற செயலைச் செய்து செய்து வரும் அமைச்சர் நாசரின் செயலை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.