புதிய தலைமுறை செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது


 வேலூர் மாவட்டம் இராமலை வாக்குச் சாவடியில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாலையில், வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்படும் காட்சியை பதிவு செய்ய செய்தியாளர்கள் சென்றனர். அப்போது புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை வாக்குச் சாவடிக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்திய ஊராட்சி வார்டு வேட்பாளர் பார்வதியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

வாக்குச் சாவடியை விட்டு தூரமாக வந்த போதும், வாக்குச்சாவடி முகவர்கள் பின்தொடர்ந்து வந்து கேமரா வயரை பிடுங்கி எறிய முயன்றதோடு மிரட்டலும் விடுத்தனர். இதனால் வாக்குச்சாவடி அருகே பதற்றமான சூழல் நிலவியது. செய்தியாளர் மீதான இந்த தாக்குதலுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி மாநில செய்தியாளர்கள் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

ஊடகத்தினர் மீது தாக்குதலில் ஈடுபட்ட சமூகவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்த நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஒருவரை கைது செய்து அவர் மீது 294பி, 323, 501(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)