சடலத்தை எடுத்து செல்வதில் இருதரப்பினரிடையே மோதல் - மயான பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார்...!
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பாக்கவுண்டர் தோட்டம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒரு வம்சத்தினரை சேர்ந்த பிரிவினர் மட்டும் அவர்களது சொந்த நிலத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்திற்கு செல்ல, கால காலமாக மேய்ச்சல் புறம்பானது வழியாக சென்றுள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பட்டா வாங்கியுள்ளார். தொடர்ந்து இந்த வழியாக வரக்கூடாது என கூறி, தகராறு செய்து வந்துள்ளார்.
![சடலத்தை எடுத்து செல்வதில் இருதரப்பினரிடையே மோதல் - மயான பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/02/5b258a3891a01334c75123108b88a51b_original.jpg)
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் இறப்பவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக இறந்தவர்களின் சடலத்தை எடுத்து செல்லும் போது, ராமமூர்த்தி, அவரது மகன்கள் ராமகிருஷ்ணன், வேடியப்பன் ஆகியோர் சேர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டுவதும், தாக்கியும் வந்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் காவல் துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் பாதை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காவேரி கவுண்டர் (85) என்ற முதியவர் வயது மூப்பால் உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்து செல்ல வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நல்லம்பள்ளி வட்டாட்சியர் செந்தில்குமார், காவல் துறையினர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வேறு இடத்தில் மயான வசதி ஏற்படுத்தி தருவதாகவும், தற்போது சடலத்தை வேறு வழியில் எடுத்து செல்ல வட்டாட்சியர் செந்தில்குமார் தெரிவித்தார்.
![சடலத்தை எடுத்து செல்வதில் இருதரப்பினரிடையே மோதல் - மயான பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/02/58482388a054601a34e77516086e8239_original.jpg)
ஆனால் கால காலமாக சென்ற பாதையில் தான் இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்வோம் என கூறி, கம்பி வேலியை உடைத்து விட்டு சடலத்தை எடுத்து சென்றனர். அப்பொழுது இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கை கலப்பானது. அப்பொழுது காவல் துறை முன்னிலையிலே ஏற்பட்ட பிரச்சினையில் ஒரு தரப்பை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் தடுத்து சடலத்தை அடக்கம் செய்ய வைத்தனர். தொடர்ந்து கால காலமாக சென்ற பாதையை எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் காவல் துறையினர் முன்னிலையில் மயான பாதை வழியில் ஏற்பட்ட பிரச்சினையில், காவல் துறை முன்னிலையில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்நது அடிதடியில் ஈடுபட்ட சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ள அதியமான் கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.