குழந்தை சிகிச்சை பெறும் படத்தை அனுப்பி அரசியல் கட்சி தலைவர்களிடம் பண மோசடி - ரம்மி மன்னன் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஜோயலின் வாட்ஸ் அப்பில் கடந்த 18 ஆம் தேதி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் இன்குபேட்டரில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்றும், அதனுடன் மருத்துவ சிகிச்சை விவரங்களும் இருந்துள்ளது. இதை அனுப்பி தொடர்பு கொண்ட நபர் தனது குழந்தை ஏழு மாதத்தில் பிறந்து உள்ளதாகவும், இன்குபேட்டரில் உள்ள தனது குழந்தைக்கு இருக்கும் பிரச்சனைக்கு தினமும் 15 ஆயிரம் ரூபாய் செலவில் ஊசி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
![குழந்தை சிகிச்சை பெறும் படத்தை அனுப்பி அரசியல் கட்சி தலைவர்களிடம் பண மோசடி - ரம்மி மன்னன் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/af8fa598b22b0972a810726c73ae5038_original.jpg)
நீங்கள் அனுப்பும் 15,000 ரூபாய், ஒருநாள் தனது குழந்தையின் உயிரைக் காக்கும் என்று குறுஞ்செய்தியை பார்த்து இறக்கப்பட்ட ஜோயல் தனது உதவியாளர் விஜயகுமாரிடம் சொல்ல, அவர் தூத்துக்குடியில் உள்ள ஜோயலின் உதவியாளர் தினகரனிடம் பணம் அனுப்ப சொல்லியதை தொடர்ந்து தினகரும் அந்த நபரின் எண்ணுக்கு (9751377445) இந்த எண்ணுக்கு கூகுள் பே மூலம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். சில நாட்கள் கழித்து அதே குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பரவி, அவரிடமே மீண்டும் இந்த குறுஞ்செய்தி வந்ததைப் பார்த்து அந்த எண்ணில் விசாரித்தபோது அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
![குழந்தை சிகிச்சை பெறும் படத்தை அனுப்பி அரசியல் கட்சி தலைவர்களிடம் பண மோசடி - ரம்மி மன்னன் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/799a5cb00527c8c776b14d6e45c59583_original.jpg)
உடனடியாக சென்னை சைபர் கிரைம் பிரிவில் இதுகுறித்து ஜோயல் சார்பில் ஜூனியர் வழக்கறிஞர் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், குழந்தையின் புகைப்படத்தைக் காண்பித்து அவசர சிகிச்சைக்கு என பணம் வாங்கிய அந்த நபர் புதுச்சேரியைச் சேர்ந்த சிவகுமார் என்கிற ஜேக்கப் என்பதை கண்டறிந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது சிவக்குமாரின் பாரபட்சமற்ற சீட்டிங் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சிவகுமாருக்கு, தற்போது ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை 7 மாதத்தில் பிறந்து இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், மருத்துவக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு அதை பலருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி அந்த அனுதாபத்தின் மூலம் பணம் பறிக்க தொடங்கியுள்ளார்.
![குழந்தை சிகிச்சை பெறும் படத்தை அனுப்பி அரசியல் கட்சி தலைவர்களிடம் பண மோசடி - ரம்மி மன்னன் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/c950152e761853741381466d7c7223e5_original.jpg)
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் என கட்சி பேதமின்றி எல்லோர் செல்போனுக்கு இந்த தகவலை அனுப்ப, அவர்களும் கூகுள் பே மூலம் பணம் அனுப்பி உள்ளனர். இதேபோன்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செல்போனுக்கு அனுப்பிய போது இதைப் பார்த்து பரிதாபப்பட்ட அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலர் இவரது செல்போனுக்கு கூகுள் பே மூலம் தங்களால் இயன்ற வரை அடுத்தடுத்து பணம் அனுப்பி உள்ளனர்.
கட்சிப் பாகுபாடின்றி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரிடம் தனது கைவரிசையை காட்டி 2 இலட்சம் வசூல் செய்து உள்ளார். சிவகுமாருக்கு 41 வயதில்தான் விழுப்புரத்தில் உள்ள ஒரு சர்ச் ஒன்றுக்கு சென்று வந்தபோது ஜேக்கப் என்று பெயர் மாற்றி கொண்டவர், அதே சர்ச்சுக்கு வந்து சென்ற 37 வயது பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
குழந்தை சிகிச்சை பெறும் படத்தை வைத்து கொண்டு வசூல் செய்த சிவகுமார் என்ற ஜேக்கப், இந்த மோசடியில் கிடைத்த மொத்த பணத்தில், ஒத்த ரூபாயைக் கூட தனது குழந்தைக்கோ, குடும்பத்திற்கோ உதவாமல் ஆன்லைன் ரம்மி விளையாடி அத்தனையும் இழந்திருக்கிறார் என்கின்றனர் சைபர் க்ரைம் காவல்துறையினர். குழந்தையின் படத்தை கொண்டு தனது சுயநலத்திற்காக மோசடி செய்யும் இவர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு கூட யாரும் உதவ முன் வருபவர்கள் சற்று தயங்குவார்கள் என்கின்றனர் சைபர் க்ரைம் காவல்துறையினர்.