பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்

 தமிழ்நாட்டில் எஸ்.பி.யாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்தார். அப்போது அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ஒருவர், அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மாவட்ட எஸ்.பியாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறப்பு டிஜிபியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதியிடமும், உள்துறைச் செயலாளரிடமும் புகார் அளித்தார்.


இந்நிலையில், சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இப்புகார் குறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து, பெண் ஐபிஎஸின் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.


சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு: 400 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!
இந்த வழக்கு விசாரணையில், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புகார் குறித்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்காணித்து வருகிறார். இந்த விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளோம் என கூறியிருந்தார்.


இந்த புகார் விசாரணை தொடர்பாகத் தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி இருந்தனர். இதற்கிடையே, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் நடுவர் முன்பு  கடந்த ஜூலை 28ஆம் தேதி அன்று பெண் ஐபிஎஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்தார்.



பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்


இந்நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி  ஜூலை 29 விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகியோர்  நேரில் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)