மோசடி செய்து தலைமறைவான நிதிநிறுவன அதிபர்...!’தப்பி ஓட முயன்றபோது எகிரி பிடித்த போலீஸ்’...!

 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பெலாக்குப்பத்தை சேர்ந்த சம்பந்தம் என்பவரின் மகன் சிவா என்கிற சிவக்குமார் (45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டிவனம்- செஞ்சி சாலையில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் எங்கள் நிதி நிறுவனத்தில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டினால் கூடுதலாக வட்டி தொகை தருவதாகவும், பல பரிசுப் பொருட்களை தருவதாகவும் கூறியுள்ளார்.


இதை நம்பி பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிதி நிறுவனத்தில் மாதம்தோறும் சந்தா பணம் செலுத்தி வந்துள்ளனர் பணத்தைப் பெற்ற சிவக்குமார் அதனை உரியவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று பண மோசடி செய்ததாக புகார் தந்ததன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் சிவக்குமார் 30க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 60 லட்சம் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தாலும், சிவகுமார் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார், இந்த நிலையில் திண்டிவனத்திலிருந்து வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற சிவக்குமாரை, ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் மடக்கிய நிலையில் தப்பிக்க முயன்ற சிவக்குமாரை காவலர்கள் எகிறி பிடித்து கையை பின் பக்கமாக கட்டியவாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிவக்குமாரை சிறையில் அடைத்துள்ளனர்.

பொதுமக்கள் எந்த ஒரு நிறுவனத்திடம் பணம் செலுத்தும் பொழுது கவனத்துடனும் மேலும் அந்த நிறுவனங்களின் முழுவிவரத்தையும் அறிந்த பின்னர் பணத்தை செலுத்த வேண்டும் அடையாளம் தெரியாதவர்கள் ஆசை வார்த்தைகள் கூறி இலவசங்களை அள்ளி தெளிப்பார்கள், இதில் மயங்கி பொதுமக்கள் பணத்தை கட்டிவிட்டு ஏமாற்றிய பிறகு காவல் நிலையத்தில் வந்து புகார் தெரிவிப்பது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற மோசடி கும்பல்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் மோசடி செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)