மூதாட்டி: மனு அளித்த மறுநிமிடமே உதவி தொகை வழங்க உத்தரவிட்ட விழுப்புரம் ஆட்சியர்..!!

 விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே 3 ஆண்டுகளாக முதியோர் உதவி தொகைக்கு போராடிய மூதாட்டிக்கு அதே இடத்தில் ஆவணங்களை ஆய்வு செய்து உதவி தொகை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பனமலை ஊராட்சி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாதிரிமங்கலம் ஊராட்சி, ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டணம் ஊராட்சி, வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொழுவாரி ஊராட்சி மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரும்பட்டு ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைந்துள்ளன.


அப்பகுதிகளில் ஆட்சியர் மோகன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் மாதிரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 100 வீடுகள், தெருவிளக்குகள், தார் மற்றும் சிமெண்ட் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதி, நியாயவிலை கடை, தந்தை பெரியார் வெண்கல சிலை, நுழைவாயில் பலகை, சமுதாய கூடம், குடிநீர் பைப்லைன் மற்றும் பொழுதுபோக்கு அறை, சுகாதார நிலையம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்ற மூதாட்டி, ஆட்சியரை அணுகி கடந்த 3 வருடங்களாக முதியோர் ஓய்வூதியத்துக்காக விண்ணப்பித்தும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். பின்னர் அவரது ஆவணங்களை ஆய்வு செய்த ஆட்சியர் அவருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க உடனடியாக உத்தரவிட்டார்.

இதனையடுத்து, 3 ஆண்டுகள் நடையாய் நடந்தும் கிடைக்காத முதியோர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்ட ஆட்சியருக்கு மூதாட்டி தேன்மொழி நன்றி தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா