கும்பகோணம் நிதி நிறுவனம் நடத்தி மோசடி : ‘பலே’ கணவன் – மனைவி கைது..!!
கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான எம்ஆர் கணேஷ் மனைவி மற்றும் நிதி நிறுவன கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக தொகை வழங்கப்படும் என கூறியதால் கும்பகோணத்தில் உள்ள தொழில்அதிபர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக யாருக்கும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா – பைரோஜ்பானு தம்பதியினர் தங்களுக்கு முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிதி நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் (56) என்பவரை கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் நிதி நிறுவன அதிபர்களான தலைமறவாகியுள்ள எம்.ஆர்.கணேஷ் சகோதர்களை தேடி வருகின்றனர்.
23 ந் தேதி இரவு கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்காக பேருந்தில் செல்ல முயன்ற, நிதி நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர்களான கும்பகோணம் டபீர் கீழத்தெருவைச் சேர்ந்த மீரா (30), அவரது தம்பி ஸ்ரீதர் (29) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் தஞ்சையில் நேற்று(27 நம் தேதி) இரவு ஹெலிகாப்டர் சகோதர்களின் ஒருவரான எம் ஆர் கணேசனனின் மனைவி அகிலா(33) மற்றும் ஏஜெண்டாக செயல்பட்ட கும்பகோணம் நகரைச் சேர்ந்த புரோகிதர் வெங்கடேசன்(58) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.