கொரொனா தொற்று பரவல் எண்ணிக்கை கோவையில் இருந்து கேரளா செல்ல கடும் கட்டுப்பாடுகள்...!
தமிழகத்தில் பேருந்து சேவைகள் துவங்கிய நிலையில் கோவை வாளையார் பகுதியில் இருந்து எந்த வித பரிசோதனைகளும் இல்லாமல் கேரள பகுதி மக்கள் வரத்துவங்கியுள்ளனர். அதே வேளையில் கோவையில் இருந்து கேரளா செல்பவர்கள் கடும் கட்டுப்பாடுகளை கடந்துதான் கேரளாவிற்குள் நுழைய முடிகின்றது.
கொரொனா தொற்று காரணமாக தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக பேருந்து போக்குவரத்து நடைபெற வில்லை. இந்நிலையில் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் நடைபெறவில்லை.
கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்தால் நேற்று முதல் இயல்பு நிலை திரும்ப துவங்கியது. மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று முதல் கோவையில் இருந்து தமிழக கேரள எல்லையான வாளையார் வரை கோவை போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வாளையாரில் இறங்கி அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பொது மக்கள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கும் கேரள பேருந்துகளில் ஏறி பாலக்காடு செல்கின்றனர். வாளையாரில் இருந்து கேரளா செல்வதற்காக வரும் பயணிகள் கட்டாயம் இ ரிஜிஸ்டிரேசன் எடுத்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொரொனா பரிசோதனை செய்து இருப்பதற்கான சான்றிதழ் இருக்கின்றதா என்பதை சோதனை சாவடியில் சரி பார்த்த பின்னர் பயணிகளை கேரளபேருந்துகளுக்கு செல்ல கேரள காவல் துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.
இ ரிஜிஸ்டிரேசன் இல்லாமல் வரும் பயணிகளுக்கு கேரள சோதனை சாவடியிலேயே இ ரிஜிஸ்டிரேசன் எடுத்து கொடுக்கப்படுகின்றது. மேலும் கொரொனா பரிசோதனை சான்றிதழ் இல்லை எனில், அங்கேயே நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் பரிசோதனை மையம் மூலம் அன்டிஜன் கோவிட் 19 பரிசோதனையானது செய்யப்பட்டு உடனுக்குடன் முடிவுகளானது பார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றது எனவும் இ ரிஜிஸ்டிரேசன், கொரொனா சான்றிதழ் இல்லாமல் கேரளாவிற்குள் அனுமதிப்பதில்லை என கேரள காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதே வேளையில் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்களுக்கு இ ரிஜிஸ்டிரேசன் கட்டாயம் என்றாலும் தமிழக காவல் துறையினர் எந்த வித சோதனையும் செய்வதில்லை. தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து துவங்கி விட்டது என்பதால் கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் கோவைக்கு எந்த வித பரிசோதனைகளும் இல்லாமல் எளிதாக வரத்துவங்கியுள்ளனர்.
தமிழக பேருந்துகளில் தனி மனித இடைவெளி இல்லாமல்,
அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளை அமர வைத்து கோவைக்கு அழைத்து வரும் நிலை இருக்கின்றது. தமிழகம் கேரளா இடையே பேருந்து போக்குவரத்தை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து துவங்கினால் கொரொனா பரவல் அதிகமாகும் என்பதால் இது வரை அனுமதி வழங்கப்படவில்லை. அதே வேளையில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பயணிகளையும், வாகனங்களையும் கேரள பகுதியில் கடும் கட்டுப்பாடுகளுடன் சோதனைகளுக்கு பின்னர் அனுமதிக்கும் நிலையில், கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகம் வரும் வாகனங்களும், பயணிகளும் எளிதாக எந்த சோதனைகளும் இல்லாமல் வருகின்றனர்.
தமிழக சோதனை சாவடியில் பெயரளவிற்கு மட்டுமே வாகன சோதனை மட்டும் நடத்தப்படுகின்றது. ஆரம்பத்திலேயே இவற்றை கட்டுப்படுத்தாமல் போனால் மீண்டும் கொரொனா தொற்று பரவல் எண்ணிக்கை கோவையில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.