குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது காவல்துறையினர் தன்னை தாக்கியதாக குடும்பத்துடன் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரபு.வழக்கறிஞரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோம்பைத்தொழு கிராமத்தில் நடைபெற்ற கோஷ்டி தகராறில் மயிலாடும்பாறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே விசாரணையில் இருந்த ஜெயபிரபு டியூப் லைட் பல்பை கடித்து தின்றதால் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், காவல்துறையினர் தன்னை தாக்கியதாக ரத்தக்காயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக நின்று அலப்பறை செய்தார்.
அவருடன் ஜெயபிரபுவின் மனைவி மற்றும் உறவினர்களும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது கானா விலக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் ஜெயபிரபு மீது தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை, போடி, கூடலூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் ஜெயபிரபு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டார்.