சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால் இன்று அல்லது நாளை மீண்டும் சிறையில் அடைக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபா தலைமறைவானார்.
இதையடுத்து கடந்த 16 ஆம்தேதி டெல்லியில் சிவசங்கர்பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 19 ஆம்தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தலையில் சிறு கட்டி இருப்பதால் அதை மருந்து மூலமே குணமாக்கிவிடலாம் என்று சிபிசிஐடி காவல்துறைக்கு மருத்துவ நிர்வாகம் தரப்பில் அறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிகிறது. இதனால் சிவசங்கர் பாபா மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.