குறைவான கட்டணத்தையே பெறுகிறோம்- தனியார் ஆம்புலன்ஸ்
கொரோனா காலத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட குறைவான வாடகையை பெற்று வருவதாக தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெற்ற தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகின்றனர்.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸை நாடிச் செல்கின்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் தனியார் ஆம்புலன்ஸ் சேவை கட்டணத்தை நிர்ணயித்து புதிய அறிவிப்பு வெளியிட்டது. புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்து வரும் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் ஒரு சில தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் தங்களைப் போன்றவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்த நற்பெயரை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர்.
கொரோனா நோயாளிகளைை உறவினர்கள் தொட்டு தூக்க தயங்கும் நிலையில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் சேவையாற்ற வேண்டும் நோக்கில் தங்களது உயிரை பணையம் வைத்து மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்து சேர்த்து வருவதாக கூறுகின்றனர்.
ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கார்த்திக் கூறியதாவது, கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறோம். பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய ஒரு சில தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் எங்களைப் போன்றவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது. வங்கியில் பெற்ற கடன் தொகையை கட்ட முடியாமல் திணறி வருகிறோம்.
அதுபோக ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர் பணி ஆபத்து என்பதால் பெரும்பாலானோர் இப்பணிக்கு வர தயங்குகின்றனர்.எனவே மக்களுக்கு சேவையாற்றி வரும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் கட்டணம் வாங்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ. மணிகண்டன்,செய்தியாளர் -விருதுநகர்