இதுவரை இல்லாத வகையில் மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கிறது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 


பெட்ரோல் - டீசல் விலை உயர்வு தொடர்பாக தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இரண்டு தவணைகளாக தலா 2 ஆயிரம் ரூபாயினை கொரோனா கால நிவாரணமாக அரிசி ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்க 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற முதல் கூட்டத்தாெடரில் ஆளுநர் உரைக்கு பிறகான சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியாகும் என்றார்.

பெட்ரோல் - டீசல் விலைகளை திமுக ஆட்சி அமைந்ததும் குறிப்பிட்ட அளவு குறைப்போம் என தேர்தல் வாக்குறுதியாக கூறியிருந்ததை நினைவு கூர்ந்து பேசிய அவர், ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மூன்று மடங்கு வரை பெட்ரோல் - டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது என்றார். குறிப்பாக அவர்கள் ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டில் 10 ரூபாய் 20 காசுகளாக இருந்த வரியானது, தொடர்ந்து உயர்த்தப்பட்டு, தற்போது 32 ரூபாய் 90 காசுகளாக உள்ளதாக கூறினார்.

இப்படி வசூலிக்கும் வரியை மாநிலங்களுக்கு முறையாக பகிர்ந்தளிக்காமல், முறையற்ற காரணங்களை கூறி ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது; இதனால் மாநில அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக பெரும் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் ஒன்றிய அரசு வரிவிதிப்பை குறைக்கவோ, கிடைக்கும் வரி வருவாயை முறையாக பகிர்ந்து கொள்ளவோ முன்வரவில்லை. இந்த நிலையில் மாநில அரசு, பெட்ரோல் - டீசல் மீது தாங்கள் விதிக்கும் வரியை குறைத்தால், அதனால் கூடுதல் இழப்பு ஏற்படுவதோடு, அது ஒன்றிய அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என்றார்.

இப்படி மாநிலங்களிடம் வரியை வசூல் செய்யும் ஒன்றிய அரசு, அதனைக் கொண்டு தங்களது ஆடம்பர திட்டங்களை நிறைவேற்றுவதில் குறியாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் வரிகளை உயர்த்தாமல், பெட்ரோல் - டீசல் விலை நிர்ணையம் செய்யப்பட்டது. அதையே தமிழ்நாட்டில் அன்றைக்கு கலைஞர் அரசும் பின்பற்றியது.

ஆனால் இன்று கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இதுவரை வரலாற்றில் காணாத அளவுக்கு தீவிரமான சென்ட்ரலஸ்சேனை கடைபிடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. தமிழகத்திடம் வாங்கிய வரியை விட குறைவான பங்கினையே திரும்ப கொடுக்கிறார்கள். ஆனால் குறைவான வரி செலுத்தும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிகம் கொடுக்கிறார்கள். இந்த நிலை தொடர்வது சரியாக இருக்காது. அதேநேரம் தமிழ்நாடு அரசின் கடன் குறித்து முந்தைய அரசு முறையான தகவல்களை வெளியிடவில்லை.

ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமான நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை உள்ளது; அந்த விவரங்கள் வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படும் என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்