வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள் : போலீஸார் போட்ட வழக்கு : நீதி கிடைக்குமா இளம்பெண்ணுக்கு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நெடுங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(40), இவரது மனைவி மஞ்சுளா (32), இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகின்றார்.
இந்நிலையில் முருகன் நாடக கலைஞராக நடித்து வருகிறார். இவர் பல வருடமாக வேலைக்குச் செல்லாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அடிகடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மூத்த மகள் 10ம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார், அதன் பிறகு பள்ளி படிப்பு நிறுத்தி விட்டு வீட்டிலே இருந்து வந்துள்ளார், பின்னர் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், முருகனின் மனைவி மற்றும் இளைய மகள் திருவண்ணாமலைக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றிருந்தனர். முருகன் மது அருந்திவிட்டு மதியம் நேரத்தில் முருகன் குடி போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மூத்த மகளிடம் குடிபோதையில் இருந்த தந்தை தனது மகள் என்று கூட பாராமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மகள் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தை முருகன் தலையில் பின்புறம் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குடிபோதை தந்தை மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் இது குறித்து கீழ்பென்னாத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர், பின்னர் முருகனின் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக முருகனின் (19) வயதான மகளை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகன் மூத்த மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்பு குடிபோதையில் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது, அப்போது எனது அம்மாவிடம் மற்றும் உறவினர்களிடம் கூறினேன் எனக் கூறியுள்ளார், அவர்கள் அப்போது முருகனை கண்டித்துள்ளனர், இதன் காரணமாகத்தான் சென்னை தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றது விசாரணையில் கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.