தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உறுதி!

 


பாலியல் அத்துமீறல் விவகாரங்கள் புகாரின் உண்மைதன்மையை விசாரித்து தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வரும் நிலையில் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளி திடலில் செட் அமைத்து தற்காலிகமாக 270 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,  தஞ்சை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாகவும்,  ஒத்துழைப்பை மக்கள் கொடுத்தால்தான் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

“முழு அடைப்பில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தற்காலிகமாக செய்யப்பட்டு வருகிறது.  போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடைபெறுவதால் 4 நாட்களில் இவை முடிவடைந்துவிடும். கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அதனை எதிர்க்கொள்ள எல்லா விதத்திலும் தயார் நிலையில் இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி போன்றவற்றை தயார் படுத்தக் கூடிய பணி நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர்,  தடுப்பூசி தட்டுப்பாடு என்பது கிடையாது  என்றும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முப்பதாயிரம் தடுப்பூசிகள் வந்து கொண்டுள்ளன என்றும் விளக்கமளித்தார்.
ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்த  கேள்விக்கு, “ஆசிரியர்கள் மீதான புகாரை எதிர்கொள்ள நேற்றைய தினம் முதல்வர் ஒரு குழுவை அமைத்துள்ளார். அதன் முதல் பணி ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், இதுபோல் புகார் வரும்போது இது உண்மைதானா என ஆராய்வது ஆகியவைதான்.  தவறு செய்பவர்கள் யார் என்றாலும்  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)