சிசிடிவி கேமரா அமைத்து மயானங்கள் கண்காணிக்கப்படும் - சென்னை மாநகர ஆணையர் தகவல்!

 


சென்னையில் உள்ள மின் மயானங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரலையாக கண்காணிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மயானங்களில் அதிகளவில் உடல்கள் குவிவதாகவும் உடல்களை எரியூட்ட அதிக நேரம் ஆவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  சென்னையில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும் கட்டுப்பாட்டு மையம் ஒவ்வொரு மண்டலத்திலும் இயங்கி வருகிறது. தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் மத்திய சென்னை எம்.பி தயாநிதிமாறன், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதிஸ்டாலின், ஆயிரம்விளக்கு எம்எல்ஏ எழிலன், சென்னை பெருநகர மாநகரட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ககந்தீப் சிங் பேடியிடம் கொரோனா மரணம் காரணமாக மயானங்களில் அதிகளவு  சடலங்கள் குவிவது தொடர்பாக கேள்வி  எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ககந்தீப் சிங் பேடி,  சென்னையில் உள்ள மின் மயானங்களை பார்வையிட்டதாகவும், அங்கு காத்திருக்கும் சூழலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மயானங்களில் எரியூட்டும் இயந்திரங்கள் தொடர்ந்து  இயங்கினால் பழுதாக கூடும் என்றும் இதன் காரணமாக காத்திருக்கும் நேரம் அதிகரித்திருக்க கூடும் என்றும் தெரிவித்தார்.

மின் மயானங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊரடங்கை மீறியதாக நேற்று மட்டும் 57 கடைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஊரடங்கை மீறியதாக தற்போது வரை ஒரு கோடியே 44 லட்சம்  ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட அமலாக்க குழு 15 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், சென்னை மாநகர மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் எனவும் ககன் தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)