தகவல் தொழில்நுட்ப புதிய விதிகளை ஜனநாயகத்தை நேசிக்கும் எவராலும் ஆதரிக்க முடியாது என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 


குடிமக்களைக் கண்காணிப்பதே சர்வாதிகாரிகளின் நடைமுறை. அதைத்தான் பாஜக அரசும் செய்ய முயற்சிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள்மீது நம்பிக்கை கொண்ட, ஜனநாயகத்தை நேசிக்கிற எவரும் இதை ஆதரிக்க முடியாது என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக அரசு வகுத்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டுமென்றும்; அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டுமென்றும்; இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. 

இதற்கு ஒப்புக் கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இது தனிமனித கருத்துரிமையைப் பறிக்கும் அடாவடி செயலாகும். அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் நேர் எதிரானதாகும்.

இந்நிலையில், இந்த விதிகள் பொதுமக்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கின்றது என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடுத்து இருக்கிறது. சமூக ஊடகங்கள் மூலமாக வன்முறையைத் தூண்டுவது, ஆபாச செய்திகளைப் பரப்புவது, வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீய செயல்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று மோடி அரசு கூறியிருப்பது வரவேற்கக் கூடியதே.

எனினும், தமது ஆட்சியை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காகத் தான் இந்த விதிகளை வரையறுத்துள்ளனர் என்பதே உண்மையாகும். இதனை மோடி அரசின் கடந்த கால நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக, அண்மையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக பாஜக அரசு எடுத்து வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

குடிமக்களின் தனிப்பட்டத் தரவுகளை விலைக்கு விற்று அதன் மூலம் அரசுக்குப் பணம் ஈட்டப் போகிறோம் என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்த ஆட்சிதான் பாஜக ஆட்சி. குடிமக்களின் அந்தரங்கங்கம் குறித்த உரிமைமீது கொஞ்சமும் மதிப்பே இல்லாத இந்த அரசு, சமூக ஊடகங்கள் குடிமக்களின் தனி மனித உரிமைகளை மீறுகின்றன என்று நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் பாஜக அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அதன் ஊதுகுழல்களாக மாறிவிட்ட சூழலில், சமூக ஊடகங்கள்தான் பெரும்பாலும் குடிமக்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பளித்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் இலட்சக்கணக்கான போலி கணக்குகளை உருவாக்கியும், அவற்றின் மூலமாகப் பொய் செய்திகளை பரப்பியும், வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வருகின்ற சங்கப் பரிவார அமைப்பினர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு அவர்களை ஆதரித்தும் வருகிற பாஜக அரசு, வன்முறை பிரச்சாரத்தையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும் தடுப்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!