இரண்டாவது அலையில் முன்களப் பணியாளர்களாக பலியாகும் காவலர்கள்! – ‘புதிய அரசாங்கம் கரிசனம் காட்டுமா?
மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு. தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை. கரோனாஇரண்டாவது அலை, இந்தியா முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் தினசரி பாதிப்பும், இறப்பும் உச்சம் அடைந்திருக்கிறது.
இரண்டாவது அலையில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் காவலர்கள், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 2 ஆயிரம் போலீஸார் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் 60 போலீஸார், கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளதால், காவல் நிலையங்களில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலகுவான பணி வழங்க காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
சில காவல் நிலையங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டாலும், பல காவல் நிலையங்களில் பின்பற்றப்படுவதில்லை எனப் புகார் எழுந்திருக்கிறது. இதுநாள்வரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் அவர்களுக்குப் பணி வழங்கப்பட்டது. இப்போது, சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும்ரோந்து வாகனங்களிலும் பணி வழங்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கும், செனடாப் சாலையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கும் இப்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், காவல் நிலையங்களிலும், ரோந்துப் பணிகளைக் கையாள்வதிலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக, கடந்த 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, திமுக முன்னணியில் இருந்ததால், அறிவாலயத்தில் ஒன்றுகூடிய திமுகவினர், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆரவாரம் செய்தனர். அப்போது, வேடிக்கைப் பார்த்ததால், தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளான தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் முரளி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதற்குப் பிறகு சுதாரித்துக்கொண்ட போலீஸார், இப்போது அறிவாலயத்தில் போலீஸ் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர். இதற்காக, தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, அடையாறு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பரங்கிமலை சரகத்தில் இருந்தும் காவல்துறையினரை ‘டைவர்ட்’ பண்ணி, மு.க.ஸ்டாலின் பயணிக்கும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.
நம்மிடம் பேசிய ஒரு போலீஸ்காரர், “ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களின் மனதைக் குளிர்விக்கவும்,பிரதிபலனைஎதிர்பார்த்தும்சில ‘உயரதிகாரிகள்’ இதுபோன்று போலீஸ் படையைக் குவிப்பது வழக்கம். வேலை பார்க்க நாங்கள் என்றைக்கும் தயங்கியதில்லை. ஆனால், கரோனா நோய்ப் பரவல் நேரத்தில் இவ்வளவு பேரை ‘பந்தோபஸ்து பணி’ என்ற பெயரில் வதைப்பது நியாயம்தானா?” என்றார்.
படை வீரர்களின் எண்ண ஓட்டத்தை‘முதல்வர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே காவல்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.