குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை விவரம் வெளியீடு!
தமிழக முதல்வராக, பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், 5 முக்கியமான திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டார். அதில், ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற கோப்பில், அவர் கையெழுத்திட்டார். வரும், 16ம் தேதி முதல், இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. ஆவின் பால் விலை குறைப்பால், அந்நிறுவனத்திற்கு ஆண்டுதோறும், 272 கோடி ரூபாய் வருமானம் குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றபின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார். அதில், இரண்டாவதாக ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளார்.
சில்லறை விற்பனை;
இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16ம் தேதி முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைந்து பெற்றுக்கொள்ளலாம்.
அதன்படி ஆவின் பால் விலை குறைப்பு விவரம் வருமாறு,
1. சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் விலை - ரூ.40
2. சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் விலை - ரூ.20
3. நிலைப்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் விலை - ரூ.22
4. நிறை கொழுப்பு பால் 1/2 லிட்டர் விலை - ரூ.24
5. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் விலை - ரூ.18.50
6. டீமேட் 1லிட்டர் விலை - ரூ.57
பால் அட்டை விற்பனை;
சென்னையில் பிரதி மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பால் அட்டை 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உண்டான பால் அட்டைதாரருக்கு 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை வழங்கப்படும்.
16ம் தேதி முதல் பால் அட்டை விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு,
1. சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் விலை - ரூ.37
2. சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் விலை - ரூ.18.50
3. நிலைப்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் விலை - ரூ.21
4. நிறை கொழுப்பு பால் 1/2 லிட்டர் விலை - ரூ.23
5. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் விலை - ரூ.18
நுகர்வோர் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும் போது ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.