திமுகவினர் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளனர்: பாஜக தலைவர் முருகன் சாடல்
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கள் கட்சி தொண்டர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் குறிவைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன், பாஜகவின் வெற்றியை தாங்க முடியாமல் மேற்குவாங்கத்தில் மம்தா பானர்ஜி கலவரத்தை கட்டவிழ்த்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய முருகன், “தமிழ் மண் பாண்டிச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறவுள்ளது, தாமரை மலராது, பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது என கூறினார்கள். இன்று 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளனர்” என்றும் பெரியார் பிறந்த ஊரிலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் 3 இடங்களில் திமுகவை தங்கள் கட்சி தோற்கடித்துள்ளதாகவும் பாஜக மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும், மதுரவாயல் அம்மா உணவகத்தை தாக்கியவர்கள் மீது சாதரண வழக்கு பதிவு செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்த முருகன், திமுக ஆட்சியமைக்கும் முன்பே காவல்துறை ஆதராவாக செயல்படுகிறது என்றும் இன்னும் ஆட்சியமைக்காத சூழலில் திமுகவினர் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளனர் என்றும் அவர் விமர்சித்தார்.