ஊரடங்கு நேரத்தில் காய்கறி விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் அதிருப்தி!!
நாளை முதல் தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் சென்னையில் உள்ள சந்தைகளில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் தமிழகம் சீர்குலைந்து வருகிறது . ஒரு நாள் பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடுமையாக இல்லாததால் மக்கள் வெளியே சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நாளை முதல் தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளை திறக்க தமிழக அனுமதித்துள்ளது.
இதன் விளைவாக இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்க காலை முதலே மக்கள் குவிந்தனர். தமிழகம் முழுவதும் உணவு பொருட்களுக்காக மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தன.
காய்கறி சந்தையில் மக்கள் குவிந்ததுள்ள நிலையில், கோயம்போடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையிலும் காய்கறி விலை உயர்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
பீன்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் 15 ரூபாய்க்கு விற்பனையான காய்கள் தற்போது 40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் கையில் காசில்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்கள், தற்போது உயர்ந்துள்ள காய்கறி விலையால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.