முக்கால் பவுன் நகையை திருடி சென்றதாக தொழிலாளி அடித்துக்கொலை!
திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் அருகே உள்ள படையப்பாசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் 19 வயதான இவரும் இவரது மனைவி ஜெயந்தியும், ஈரோடு மாவட்டம் கருமாண்டாம்பாளையம் அருகே உள்ள குள்ளக் கவுண்டன்புதூர், அமரன் காட்டு தோட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது தோட்டத்தில் பன்றி மேய்ப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளனர். இருவரும் அங்கேயே தங்கி பன்றி மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சத்தியமூர்த்தியின் தாய் சம்பூர்ணத்தின் காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மலை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தங்களது சொந்த ஊரான திருப்பூருக்கு சென்று விட்டனர். ஒரு வாரமாக தம்பியினர் திரும்பி வராததால் கணேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு வேலை இருப்பதாக கூறி சத்தியமூர்த்தி அழைத்துள்ளார்.
அதனை நம்பி இன்று ஈரோடு வந்த கணேஷை, சத்தியமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தொலைபேசியில் மனைவிக்கு தொடர்பு கொண்டு கம்மலை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து ஜெயந்தி மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கம்மலை கொடுத்து கொடுத்துவிட்டு கணவன் கணேஷனை அழைத்துக்கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் பலமாக தாக்கப்பட்டதால் நடக்க முடியாமல் திணறிய கணேஷன் அங்கேயே வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, கணேஷனின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மலையம்பாளையம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றினர். தொடர்ந்து, மலையம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தொழிலாளியை தாக்கியவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - மா.பாபு