பதுக்கி வைத்து எரிசாராயம் விற்பனை: 2,650 லிட்டர் சாராயம் பறிமுதல்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, மளிகை, கறிகடை தவிர அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, ஒருசில இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கூட்டுறவு நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 81 கேன் எரிசாராயத்தையும், ரூ.9 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு காரை கைப்பற்றினர். மேலும் அந்த எரிசாராயத்தை அடைத்து விற்பனை செய்வதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேன்களையும் கைப்பற்றினர்.
போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் சாக்கியம் பள்ளியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு சென்று கைப்பற்றப்பட்ட எரிசாராயம் மற்றும் ரொக்கப்பணத்தை பார்வையிட்டார்.