தேவையின்றி சுற்றித்திரிந்த திருச்சி கே.கே.நகர் 250க்கும் மேற்பட்டோரின் வாகனங்கள் பறிமுதல்!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வருகிற 24-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியே செல்வோர் இ.பதிவு செய்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வாகனத்தில் பயணிப்போர் இ-பதிவு கட்டாயம் என்ற நிலையில் திருச்சி மாநகரில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 8 நிலையான சோதனைச் சாவடிகள் , 24 தற்காலிக சோதனைச் சாவடிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ-பதிவு இல்லாத, தேவையின்றி வந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறு உத்தரவு வரும் வரை வாகனங்கள் அனைத்தும் ஆயுதப்படை மைதானத்திலேயே வைக்கப்படும் என்றும் மறு உத்தரவு வந்த பிறகு அபராதம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.