108 ஆம்புலன்ஸுக்குக் கட்டணம் என்று தவறாகச் செய்தி போடுகின்றனர்; அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுங்கள்: ஊடகங்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை
காட்சி ஊடகத்தினருடன், சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் அப்போது மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுங்கள் என்று ஊடகத்துறையினரை கேட்டுக் கொண்டார்.3.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய, சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.மேற்கு வங்கம், துர்காபுரியில் இருந்து, 80 டன் திரவ ஆக்சிஜன், ரயிலில் வந்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் இருந்து, விமானப்படை விமானத்தில், திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது, என்று கூறினார் ஸ்டாலின்.
ஊடகத்துறையினருக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை:
மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடியை ஒரு சேர சமாளித்து வருகிறோம்.இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அரசு எடுத்து வரும் முயற்சிகளை, ஊடகங்கள் முழுமையாக எடுத்துரைக்க வேண்டும். இது, அரசியல் விவகாரம் அல்ல; உயிர் காக்கும் விஷயம் என்பதால், கொரோனா விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும்.
தமிழக அரசு வெளிப்படைத் தன்மையாக உள்ளது; எதையும் மறைக்கக் கூடாது என, உத்தரவிட்டு உள்ளேன். பல மாதங்களாக மறைக்கும் நிலைமை நீடித்துள்ளது. இப்போது, முழு உண்மையை தெரிவித்து வருகிறோம்.தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், '108' ஆம்புலன்சுக்கு கட்டணம் என, தவறாக செய்தி போடுகின்றனர். இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.