தமிழக அமைச்சர் ஐகோர்ட்டில் வழக்கு
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், “சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நான் உட்பட 77 பேர் போட்டியிட்டுள்ளோம். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள், வேலாயுதப் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து வருகிற மே 2-ந்தேதி எண்ணப்படும். இங்கு, 2 அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கொரோனா வைரஸ் 2-வது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
எனவே, 3 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும், முக கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தும், இதுவரை பதில் வரவில்லை.
வாக்கு எண்ணிக்கையின் போது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினர்.