கொரோனா அச்சத்தால் சொந்த ஊர் திரும்ப ரயில் நிலையங்களில் குவியும் தொழிலாளர்கள்!
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். மும்பையிலும் இதே போன்ற நிலையே காணப்படுகிறது. நாட்டின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு லட்சத்தை தாண்டி வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி ஆகிய மாநில அரசுகள் இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்துள்ளன.
தமிழகத்திலும் சனிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளன. கடந்தாண்டு போல் போக்குவரத்து வசதிகள் முடக்கப்படும் என்ற அச்சத்தில் பெருநகரங்களில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
கடந்தாண்டு பொது முடக்க காலத்தில் சுமார் ஒரு கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தும் சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களிலும் சென்றது குறிப்பிடத்தக்கது.