அரசுக்கு ராணுவம் உதவ வேண்டும்; ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்..
கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா 2வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா சிகிச்சை பணியில் மாநில அரசுகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் ராணுவம், டி.ஆர்.டி.ஓ. ஆகிய அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சைக்காக உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ராணுவ கமாண்டர்கள், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்து, தேவையான உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.