இயந்திரங்களுக்கான பெட்டிகளுடன் வந்த கால்டாக்ஸி: சேலம் மேற்கு தொகுதி வாக்குச்சாவடியில் பரபரப்பு

 


சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜாகிர் அம்மாபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 18 வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 8 மணி அளவில் வாக்குப்பதிவு முடிவுற்றது. இந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக, வாக்குச்சாவடி மையத்துக்குள் கால் டாக்ஸி ஒன்று உள்ளே வந்தது.

அதில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் பெட்டிகள் இருந்ததை அறிந்து, அங்கிருந்த அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இந்த கால் டாக்ஸியை அங்கிருந்து நகர விடாமல் முற்றுகையிட்டனர். இந்தத் தகவல் பரவியதை அடுத்து, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்,வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே திரண்டனர். பதற்றமான சூழ்நிலை உருவானதை அடுத்து, வாக்குச்சாவடி மையத்தின் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரச்சினை குறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், வாக்குப்பதிவு முடிவுற்றதும்,இயந்திரங்களுக்கு சீல் வைப்பதற்கு அதிகாரிகள் காலம் தாழ்த்தினர். இந்த நிலையில் தேர்தல் பணிக்கு

 தொடர்பில்லாத கால் டாக்ஸி ஒன்று வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான 11 பெட்டிகளுடன் வாக்குச்சாவடி மையத்துக்குள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை வாக்குப் பெட்டிகளை இங்கிருந்து, எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

தொடர் விசாரணையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 11 பெட்டிகள் தவறுதலாக சேலம் மேற்கு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கால்டாக்ஸி திருப்பி அனுப்பப்பட்டது. பின்பு வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது பாதுகாப்புக்காக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் உடன் சென்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)