அரிவாளால் வாக்கு இயந்திரத்தை உடைத்த குடிமகன் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஆனந்தன் என்பவர் குடிபோதையில் வந்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரெங்கசாமி, காவலர் இளைய பெருமாளுடன் தகராறு செய்துவிட்டு வாக்குப் பெட்டிகள் இங்கிருந்து எப்படி போகிறது பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்ற நிலையில்,பின்னர் அரிவாளுடன் பள்ளியின் பின்பக்கமாக வந்து வாக்குபதிவு மையத்திற்குள் நூழைந்து வாக்கு பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த வி.விபேடை அரிவாளால் தாக்கி உடைத்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த போலீசார் அவரை அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர். தகவல் அறிந்து வந்த சப் கலெக்டர் ஆனந்த்மோகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இயந்திரத்தை உடைத்த ஆனந்தை கைது செய்தள்ளனர்.
தொடர்ந்து மற்றொரு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.