பிரபல பிரியாணி கடைக்கு சீல்! - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சென்னையில் பிரபல பிரியாணி கடையில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரொனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்கள் காய்கறி கடைகள் பேன்சி ஸ்டோர்கள் என அனைத்து கடைகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் இன்று பிற்பகல் ஏராளமான கூட்டம் குவிந்துள்ளது. மேலும் பிரியாணி வாங்க வந்த மக்கள் முக கவசம் அணியாமல் முண்டி அடித்து நின்று கொண்டிருந்தனர்.
இந்தசமயத்தில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளையும் ஆய்வு மேற்கொண்டு வரும்போது, காலடிப்பேட்டை பிரியாணி கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் கொரோனா விதிகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றிருப்பதை கண்ட வருவாய்துறை அதிகாரிகள் உடனடியாக பிரியாணி கடைக்கு சீல் வைத்தனர்.
தமிழகத்தில் நாளை இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றை மக்கள் கண்டுகொள்ளாமல் பயணிப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - அசோக்குமார்