ஹோட்டலில் தாக்குதல்;காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
கோவையில் உணவகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், இரவு நேரங்களில் உணவகங்களுக்கான நேரக்கட்டுப்பாடும் தீவிரமாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கோவையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி உணவகத்தை மூடக் கூறி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் அருகிலிருந்த ஒரு பெண் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த காவல் உதவி ஆய்வாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இரண்டு வாரக்காலங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கோவை மாநகர ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, உணவகத்திற்குள் புகுந்து தாக்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.