மாதம் 10 ஆயிரம் நிவாரணம் வேண்டும்; கரகாட்டக் கலைஞர்கள் திருநெல்வேலி ஆட்சியரிடம் மனு.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அத்தகைய திருவிழாக்களில் ஆடும், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரம், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு, தென்மண்டல அனைத்து கலை சங்கங்களின் கூட்டமைப்புடன், திருநெல்வேலி மாவட்ட கரகாட்டக்கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஏப்ரல்.21 புதன்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
"தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று தடை காரணமாக,கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால், கரகாட்டக் கலைஞர்களாகிய நாங்கள், வருவாய் எதுவும் இல்லாமல், வாழ்வாதாரத்தை, முற்றிலுமாக இழந்துள்ளோம். எனவே, எங்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும், கொரோனா கால நிவாரண நிதியாக, பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்! அல்லது ஊர்- ஊராக சென்று, கரகாட்டம் ஆடி, பணம் வசூல் செய்வதற்கு, எங்களை அனுமதிக்க வேண்டும்!” இவ்வாறு, திருநெல்வேலி மாவட்ட கரகாட்டக் கலைஞர்கள், ஆட்சித் தலைவரிடம் கொடுத்துள்ள, கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.