லஞ்சம் பெற்ற பிறகும் FIR பதிவு செய்யவில்லை என புகார் - ஆய்வாளருக்கு ரூ1 லட்சம் அபராதம்
உளுந்தூர்பேட்டை மாவட்டம் இருந்தை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி ஜெகநாதனுக்கும், பக்கத்து வீட்டிலிருந்த ராசாமணிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சுந்தரி திருநாவலூர் காவல் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் புகார் அளித்துள்ளார்.
அதில் வழக்குபதிவு செய்ய உதவி ஆய்வாளர் எழிலரசி ( தற்போது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருக்கிறார் ) 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் 2 ஆயிரத்தை கொடுத்த பின்னரும் வழக்கு பதியாததால், அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுந்தரி புகார் அளித்தார்.
இந்நிலையில், இரு குடும்பத்தாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், அதில் வழக்கு பதியபட்டு, சுந்தரி, அவரது மகன் காமராசு மற்றும் சிலரை காவல்துறையினர் வீடு புகுந்து தாக்கி, கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளியே வந்த சுந்தரி, முன்விரோதம் காரணமாக தன்னை கைதுசெய்து சிறையில் அடைத்தாக திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி, தலைமை காவலர் முருகராஜ் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 2018ஆம் ஆண்டில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினரான துரை. ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், ஆய்வாளர் எழிலரசியின் கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல் இருப்பது நிரூபணமாவதாக கூறி, பாதிக்கப்பட்ட சுந்தரிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டை 4 வாரத்தில் வழங்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டதுடன், இந்த தொகையை ஆய்வாளர் எழிலரசியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய அனுமதித்துள்ளார்.
மேலும் தலைமை காவலர் முருகராஜ்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதால் அவருக்கு எதிரான வழக்கை மட்டும் தள்ளுபடி செய்துள்ளார்.