பிணவறையில் உள்ள உடல்களைக் கையாள என்ன நடைமுறை? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு


 தமிழக அரசு மருத்துவமனைகளில் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத உடல்களைக் கையாள என்ன நடைமுறைகளை அரசு வைத்துள்ளது என்பது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை, 10 நாட்களுக்குப் பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்தச் சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்று வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், உரிமை கோரப்படாத உடல்கள் மருத்துவமனைகளில் எப்படிக் கையாளப்படுகின்றன என்பது குறித்தும், இது தொடர்பான விதிகளுடனும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)