சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி-யை இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழக சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் டிஜிபி-யிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டது.
சிபிசிஐடி விசாரிக்க தொடங்கிய பின் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெண் எஸ்.பி. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்கை விசாரனைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
அந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்ததன் அடிப்படையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாகா குழுவில் உள்ள ஒருவர் எவ்வித விசாரணையும் இல்லாமல் தன்னை தூக்கிலிட வேண்டுமென வாட்ஸ் அப்பில் விமர்சிக்கிறார் என சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என எஸ்.பி.-யை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ல் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.