வைகைச்செல்வனிடம் கேள்வி கேட்ட முதியவருக்கு அடி!

 



அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனுக்கு பாளையம்பட்டி பொதுமக்கள் எதிர்ப்பு . இதற்கு முன்பு வெற்றி பெற்று அமைச்சராக இருந்த நீங்கள் எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்ட முதியவரை அதிமுக நிர்வாகிகள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011 ஆண்டு வெற்றி பெற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த வைகைச்செல்வன். இவர் 2011ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் இவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றார். அதன்பின்பு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் தொகுதி பக்கமே தலை காட்டாமல் இருந்த வைகைச்செல்வன் தற்போது அதிமுக சார்பில் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நேற்று அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகைதந்த வைகைச்செல்வன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்தார்.

அப்போது அங்கே நின்று கொண்டிருந்த முதியவர் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனை பார்த்து இதற்கு முன்பு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த நீங்கள் எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள் இப்போது மீண்டும் எங்கள் பகுதிக்கு ஏன் வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் அவரை கடுமையாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக சட்டப்பேரவை வேட்பாளர் வைகைச்செல்வனை பார்த்து ஜனநாயக ரீதியில் கேள்வி கேட்ட முதியவரை அதிமுகவினர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!