நீக்கும் வேலையை செய்து வருகிறார் அமைச்சர் வீரமணி’ - கண்கலங்கிய அமைச்சர் நிலோஃபர் கபில்

 


கட்சியில் இருந்து என்னை நீக்கும் வேலையை செய்து வருகிறார் அமைச்சர் வீரமணி என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இரட்டை இலைக்கும் விசுவாசமாக இருப்பேன் என்றும், கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறினார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் நிலோஃபர் கபில். 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. நேற்று, சென்னையிலிருந்து வாணியம்பாடி திரும்பிய அமைச்சர் நிலோஃபர் கபிலுக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிலோஃபர் கபில், “ஒரு நாளிதழில் நான் துரைமுருகன் உறவினராக பழகுகிறேன் என்று எழுதி இருக்கிறது. அப்படி நான் பழகவில்லை, அமைச்சர் வீரமணிதான் மாமன் மச்சான் உறவுகள் வைத்து கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து டெண்டர்கள் அவர்களுக்கிடையேதான் உறவு வைத்து கொண்டிருக்கிறார்கள். நான் இதுவரை துரைமுருகன் அவர்களிடம் பேசியதே கிடையாது. சட்டமன்றத்தில் தூரத்திலிருந்து எனக்கு அவர் சலாம் சொல்லுவார். நானும் சலாம் சொல்லுவேன், அவ்வளவுதான் எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு.

செய்தித்தாள் ஒன்றில், மாவட்ட செயலாளர் வீரமணி என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக தவறாக போட்டிருக்கிறார்கள். அம்மா அவர்கள் எங்கள் இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார்கள் என அதில் சொல்லப்பட்டு இருக்கிறது. சத்தியமாக சொல்கிறேன் எனக்கும் வீரமணிக்கும் அம்மா எந்த சமாதானமும் செய்ததில்லை. அம்மா அவர்கள் மறைந்துவிட்டார் என்று இப்படி எல்லாம் பொய் பேசக்கூடாது.

ஜெயந்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் எம்.எல்.ஏ.வாக இருந்தார்கள் அவர் வீட்டிற்கு நான் அடிக்கடி போவேன். நீங்கள் இஸ்லாமியராக இருக்கிறீர்கள் அதனால் அம்மா உன்னை எடுக்க மாட்டார்கள் நீங்கள் அம்மா கேட்டால் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டார். அவர் தொல்லையால் தான் 3 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து சென்று விட்டார்கள். எனக்கும் நிறைய தொந்தரவு அவர் தந்துள்ளார். இதுவரைக்கும் என் கட்சிக்காக, நான் ஒரு அமைச்சராக இருப்பதால் என் அம்மாவுடைய மரியாதைக்காக எடப்பாடி அவர்களின் மரியாதைக்காக நான் யாரிடமும் புகார் செய்ததே இல்லை.

செய்தித்தாளில் வெளியான தகவலால்தான் மக்கள் மத்தியில் என்னை அவமானப் படுத்தியதால் தான் நான் இன்றைக்கு பேசிகொண்டிருக்கிறேன். 24 ஆயிரம் வாக்குகள் வாணியம்பாடியில் கிடைக்கவில்லை உண்மைதான், என்ன செய்வது சமுதாயத்தினர் வாக்கு செலுத்தவில்லை ஏன் என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எமது முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்ட தான் செய்வார்கள்.

இந்த ஊருக்காக கட்சிக்காக 20 ஆண்டுகாலமாக சேவை செய்து வருகிறேன். 1991ல் தான் நான் அதிமுகவில் சேர்ந்தேன் அப்போது இருந்த அமைச்சர் இந்திரகுமாரி தெரியும் இரண்டு முறை நகர மன்ற தலைவராக இருந்தேன் அப்போது இஸ்லாமியர்கள் தானே வாக்களித்தார்கள். அப்போது இஸ்லாமியர்களைப் பற்றி யாரும் பாராட்டி பேசவில்லையே. வாணியம்பாடி பகுதியில் உள்ள நியூ டெல்லியில் கவுன்சிலராக வெற்றி பெற்றேன். அங்கு அனைவரும் இஸ்லாமியர்கள்தானே, அப்போது நான் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றி பெறவில்லையா!.

இஸ்லாமியர்கள் ஓட்டு போடவில்லை ஓட்டு போடவில்லை என்று கூறுகிறார், ஏன் அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அவருடைய சமுதாயத்தை அவர் உயர்த்திக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை, தற்போது வழங்கியுள்ள பதவிகளின் அனைத்து  செயலாளர்களும் வன்னியர்கள் தான் இருப்பார்கள். முதலியார்கள் எத்தனை பேர் உள்ளனர் முஸ்லிம்கள் எத்தனை பேர் உள்ளனர் ஆதிதிராவிடர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்றும், மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை பேர் உள்ளார்கள் என எடுத்து பாருங்கள். என் சமுதாயமும் எனது கட்சியும் என் இரு கண்கள்.

பாஜக கூட்டணி இருந்தும்கூட அமைச்சராக இருந்த பிறகு, என்னுடைய இஸ்லாமிய சமுதாயத்தினர் என்னை என்னென்ன பேசினார்கள் என, எனக்கு தான் தெரியும் (கண்கலங்கி அழுதபடியே பேசினார்.) ஆனால், அதெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு பாஜகவில் இருந்துகூட கட்சிக்காக செயல்பட்டேன். இன்றைக்கு தவறாக இதைப் பதிவு செய்கிறார்கள். திமுகவுடன் தொடர்பு இருக்கிறது என்று போடுகிறார்கள். அதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

டெண்டரில் உறவு திமுக மாவட்ட பொருளாளர் தேவராஜ்க்கு எவ்வளவு டெண்டர் கொடுத்துள்ளார் என்று பாருங்கள், தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு ஓரிரு மாதத்திற்கு முன்பாக ஏலகிரியில் கூட்டணி அமைத்து பேசினார்கள். துரைமுருகன் இன்னும் சிலர் இருந்தார்கள் என எனக்கு தகவல் வந்தது. அதனால்தான், காட்பாடி தொகுதிக்கு தற்போது ராமுவை வேட்பாளராக நிறுத்தி உள்ளார்கள். ராம் அவர்கள் துரைமுருகனை எதிர்த்து ஜெயிக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

ஜமாத்தை பார்த்துதான் நான் கட்சிக்கு வந்தேன், அம்மாவை பார்த்துதான் நான் கட்சியில் வந்தேன். அம்மாதான் எனக்கு எம்.எல்.ஏ. பதவி தந்தார். அம்மாதான் எனக்கு அமைச்சர் பதவி தந்தார். அம்மாவுடைய மரியாதைக்காக அம்மா என்னை கொண்டு வந்ததற்காக, யார் வேட்பாளராக அறிவித்தாலும் பரவாயில்லை, தலைமை கழகம் என்ன அறிவித்திருக்கிறதோ அதை, கண்டிப்பாக வேலை செய்து வெற்றி பெறச் செய்வேன். இது என்னுடைய கடமையாகும்.

எனக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்காக இந்த வேலையை செய்து வருகிறார்கள். காலையில் இருந்து எனக்கு எத்தனை போன்கள் 10 கட்சிகள் மேல் என்னை அழைத்தார்கள். அனைத்து கட்சியும்  என்னை தொடர்புகொண்டு அழைத்தார்கள். வேறு கட்சிக்கு செல்லும் தவறை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன்.
அம்மா கட்சிக்காக விசுவாசமாக இருப்பேன். என்னுடைய அண்ணன் எடப்பாடியார், என்னுடைய அண்ணன் ஓ.பி.எஸ். அவர்களுக்கும் இரட்டை இலைக்கும் விசுவாசமாக இருப்பேன்” இவ்வாறு நிலோஃபர் கபில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் .

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)