லஞ்சம் கேட்டு அதிகாரிகள் டார்ச்சர் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை...
சென்னை: எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் விக்ரம் (30), இளம் தொழிலதிபர். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. விக்ரம், மணலி அடுத்த விச்சூரில் கடந்த 2019 அக்டோபர் மாதம் ரூ.60 லட்சம் முதலீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கினார். இதற்காக, மின் வாரிய ஓய்வுபெற்ற ஊழியரான தனது தாய் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்குவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் விக்ரம் தொடங்கினார்.
அப்போதும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து நடத்த அப்பகுதியை சேர்ந்த வருவாய் துறை உயரதிகாரிகள், கிராம அலுவலர், மின்வாரிய அதிகாரிகள், தொழில்துறை அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள் உள்பட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவரும், வேறு வழியின்றி பல லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
இது தவிர, உள்ளூர் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்கள், அரசியல் பிரமுகர்களும் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வாங்கியுள்ளனர். அதிக முதலீடு செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி விட்டதால் வேறு வழியின்றி, சுத்திகரிப்பு நிலைய வருமானத்தில் இருந்து பெரும் பகுதியை லஞ்சமாகவே கொடுத்துள்ளார். இதனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதுடன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் தவித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து லஞ்சம் கேட்டு அதிகாரிகள் நச்சரித்துள்ளனர். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான விக்ரம், கடந்த 12ம் தேதி லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு சுத்திகரிப்பு நிலையம் நடத்த முடியாமல் தவிப்பதை உருக்கமுடன் குறிப்பிட்டு, ‘தனது இறுதி கடிதம் இது’ என்று முதல்வரின் தனிப்பிரிவு, காவல்துறை அதிகாரிகள் என பலருக்கும் இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம் காலை மனைவியிடம், ‘வெளியே சென்று விட்டு வருகிறேன்’ என்று கூறி சென்ற விக்ரம், அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பொது கழிவறையில் விக்ரம் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். எண்ணூர் போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர் போச்சு
லஞ்சம் கேட்டு மிரட்டியவர்கள் பட்டியலையும், தான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்ற விவரத்தையும் முதல்வருக்கும், காவல்துறைக்கும் விக்ரம் இ.மெயில் அனுப்பியிருந்தார்.
அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர் போச்சு
லஞ்சம் கேட்டு மிரட்டியவர்கள் பட்டியலையும், தான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்ற விவரத்தையும் முதல்வருக்கும், காவல்துறைக்கும் விக்ரம் இ.மெயில் அனுப்பியிருந்தார்.
அதுபோன்று இவரது சகோதரர் விக்னேஸ்வரன், அண்ணி ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார். அதை அவர்கள் பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயம் விக்ரமிடம் பேசி சமாதானப்படுத்தி இருக்கலாம் என்று அவரது மனைவியும் உறவினர்களும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.