வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது : ஆதார் ஆணையம் உடனே விசாரிக்க உத்தரவு!!

 


பாஜக மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், புதுச்சேரியில் பாஜகவினர் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு டயல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகபுதுச்சேரி இந்திய ஜனநாயக இளைஞர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக மார்ச் 26ம் தேதி விரிவான அறிக்கை தேர்தல் ஆணையம்  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் மீண்டும் மேற்கண்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'வாக்காளர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்ய பாஜ.கவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை. அனுமதி பெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பா.ஜ.க-விற்கு மார்ச் 7ல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ஆனால் இதுவரை பாஜக தரப்பில் பதிலளிக்கவில்லை.சைபர் கிரைம் அறிக்கையை பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார்,'எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 31ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!