மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

 


மாநில மனித உரிமை ஆணையர் நியமனத்தில் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளது, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் விருப்படி மனித உரிமை ஆணையத்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார், என நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவி 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவரை தேர்வு செய்த பின் தேர்வுக் குழுவை கூட்டியதாக கூறி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தேர்வுக் குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, நீதிபதி பாஸ்கரன் நியமனம் தொடர்பான பரிந்துரையை திருப்பி அனுப்பும்படி, மக்களவை உறுப்பினர் திருமாவளவன் விடுத்த கோரிக்கையையும் ஆளுநர் பரிசீலிக்கவில்லை.

பத்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் உள்ள நிலையில் 2 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட நீதிபதி பாஸ்கரனை நியமித்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அவரது நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். நியமன உத்தரவை செல்லாது என அறிவித்து, தகுதியானவரை நியமிக்க வேண்டும்”. என கோரிக்கை வைத்துள்ளார்.

தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது இந்த வழக்கின் விசாரணையை, பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)