தக்காளி… கூடை கூடையாக குப்பையில் வீசப்படும் அவலம்..! விலை வீழ்ச்சியால் விரக்தி

கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 16 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளிடம் ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கு கேட்பதால், பறிப்பு கூலியை கூட கொடுக்க இயலாமல் தக்காளியை கூடை கூடையாக குப்பையில் கொட்டும் கொடுமையான நிலைக்கு கிருஷ்ணகிரி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


 


தமிழகத்தில் வெங்காயத்தில் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்லும் நிலையில் தக்காளியின் விலை விவசாயிகளை அதலபாதாளத்தில் தள்ளி இருக்கின்றது.


 


கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 16 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சில்லரைக் கடைகளில் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலைவைத்து விற்கப்படுகின்றது. ஆனால் தக்காளியை விதைபோட்டு தண்ணீர் பாய்ச்சி வளர்த்து விளைவித்து சந்தைக்கு அனுப்பி விளைச்சலின் பலனை அடையலாம் என்று காத்திருந்த நிலையில் தக்காளியின் திடீர் விலை வீழ்ச்சி கிருஷ்ணகிரி விவசாயிகளின் தலையில் பேரிடியாய் இறங்கி உள்ளது.


 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சூளகிரி பகுதியில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் சென்னை, வேலூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது.


 


2 மாதங்களுக்கு முன்பு வரை கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்ற நிலையில், தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கு மட்டுமே கேட்பதால், பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை செடியில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.


 


சில விவசாயிகளோ பறித்த தக்காளியை சந்தைக்கு கொண்டு செல்ல வண்டி வாடகை கொடுக்க கூட விலை கிடைக்காததால் கூடை கூடையாக தக்காளியை ஏரிக்கரை குப்பைக் கிடங்கில் கொட்டிச் செல்கின்றனர்.


 


முன்பெல்லாம், போக்குவரத்து வாகன வசதி, தொலை தொடர்பு வசதி இல்லாமல் விலை நிலவரத்தை அறிந்து கொள்ள இயலாமல் விவசாயம் சூதாட்டம் போல நடந்தது. ஆனால் தற்போதைய சூழலில் அனைத்து இடங்களுக்கும் தேவையான அளவு போக்குவரத்து வசதி, தக்காளியை பதப்படுத்தி, ஜாம், ஜாஸ், ஊறுகாய் போன்ற மதிப்பு கூட்டுப்பொருளாக்கும் வசதிகள் வந்தபின்னரும், விவசாயிகள் விளைவித்த தக்காளி குப்பைக்கு செல்வதற்கு, மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கதவறி விட்டதே காரணம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.


 


தக்காளி மட்டுமல்ல எந்த ஒரு விவசாய விளைபொருளும் வீணாகாமல் பதப்படுத்தி நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!