காதல் வலை விரித்து பெண்களுக்கு மிரட்டல்..!
நாகர்கோயில் காசி போன்று, சென்னையில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பலரையும் காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை தனது மகளின் மொபைல் எண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பும் நபர், மகளின் தோழிகளின் மொபைல் நம்பரை கேட்டு தொடர்ச்சியாக செல்போனில் தொந்தரவு செய்து வருவதாகவும், இல்லையென்றால் மார்பிங் செய்யப்பட்ட தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக கூறி மிரட்டல் விடுப்பதாகவும் அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவிக்கு ஆபாச மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்து தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த 25 வயதான அருண் கிறிஸ்டோபரை கண்டுபிடித்து கைது செய்தனர். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து தற்காலிகமாக மின்வாரிய துறையில் அவன் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. சமூக வலைதளம் மூலம் அறிமுகமான அந்த கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி, அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டி வந்த கிறிஸ்டோபர், அவரது தோழிகளையும் தனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறி அவர்களின் மொபைல் எண்களையும் வலுக்கட்டாயமாக கல்லூரி மாணவியின் மொபைலிலிருந்து எடுத்துள்ளான். மேலும் கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை வாங்கிக்கொண்டு அதிலிருந்து அவரின் தோழிகளுடன் நட்பாக பழகி ஆபாசமாக குறுஞ்செய்திகளையும் ஆபாசமாக புகைப்படங்களையும் அனுப்பி வந்துள்ளான்.