ஆளுமா டோலுமா ஆட்டம் போட்டா கொரோனா காலிமா..! சிறப்பான சித்தா டாக்டர்

திருப்பத்தூரில் அரசின் சித்தமருத்துவ சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு குதூகலப்படுத்தி வருகிறார்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளான 425 பேர் அங்குள்ள 24 சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


24 கொரோனா சிகிச்சை மையங்களிலும் நோயாளிகளின் விருப்பத்திற்குரிய தேர்வாக திருப்பத்தூரை அடுத்த அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் இடம் பிடித்துள்ளது.


70 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதியுள்ள இந்த சிகிச்சை மையத்தில் இதுவரையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.


இந்த சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் காலையில் எழுந்ததும் தினந்தோறும் மூலிகை தண்ணீரில் குளிக்கின்றனர், பிறகு நடைப்பயிற்சி அரை மணி நேரம் யோகா பயிற்சி, செய்கின்றனர்.


சுவாசக்கோளாறை போக்க மூலிகை மருந்துகளை கொண்டு ஆவி பிடிக்கின்றனர், காலையில் கபசுரக் குடிநீர், 10 மணிக்கு மூலிகை சூப் அல்லது முருங்கை சூப், மதிய வேளையில் ஆரோக்கிய உணவு, மூன்று மணிக்கு முளைக்கட்டிய தானியங்களின் சிற்றுண்டி, மாலை 5 மணிக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகின்றது.


மாலை வேளையில் மூலிகை தூபம் போட்டு அணைத்து அறைகளிலும் வைக்கின்றனர். 6 மணிக்கு மேல் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றுகின்றனர்.


நோயாளிகள் செல்போனில் முடங்குவதை தடுக்கும் பொருட்டு புத்தகத்தை படிக்க வைக்கின்றனர். அனைவரும் ஓய்வு எடுக்கும் நேரத்தில் மன அமைதிக்காக புத்தகத்தை படித்தால் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்றும் பொது அறிவு வளரும் என்ற எண்ணத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் நூலகத்தை தொடங்கியுள்ளார் சித்த மருத்துவர் விக்ரம்.


இதனால் சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகள் அனைவரும் செல்போனை பார்ப்பதை விட்டு புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். முதலில் அச்சத்துடன் சித்த மருத்துவ சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகள், ஒருவர் கூட இதுவரையில் இறப்பு இல்லை என்பதால் மகிழ்ச்சியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நோயாளிகள் தனக்கு நோய் உள்ளது என்று மனதில் ஆழமாக பதிந்து விட்டால் அதுவே அவர்களுக்கு பெரிய நோயாக மாறிவிடாமல் இருக்கவும், அதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் நல்ல கருத்துடைய புத்தகங்களை வழங்கி வருகின்றார்.


மாலை நேரத்தில் நோயாளிகள் மன அழுத்தம் இன்றி கொரோனாவை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்காகவும் நோயாளிகளின் மத்தியில் சித்த மருத்துவர் விக்ரம் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடுவதோடு நோயாளிகளையும் தன்னுடன் ஆடவைத்து உற்சாகப்படுத்துகிறார்.


இதனால் நோய் குணமடைந்த பின்னரும் சிறப்பான சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை பிரிந்து செல்ல மனமில்லாமல் செல்வதாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.


ஆரம்ப நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நம்பிக்கை அளித்து குணமடையவைப்பதிலும், கொரோனா பரவலை தடுப்பதிலும் சித்தமருத்துவத்தின் பங்கு மகத்தானது என்பதை ஒவ்வொரு ஒரிஜினல் சித்த மருத்துவர்களும் மெய்ப்பித்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)