மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையின் மனித உரிமை மீறல்கள்..

டெல்லி கலவரத்தில் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.


அதில் கடந்த ஆண்டு CAA எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைகளை காவல்துறை கண்டும் காணாமலும் இருந்தது பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறது.


டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு வெளியிட்ட CAA சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாஹின்பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.


அதை தொடர்ந்து ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திலும் போராட்டம் வெடித்தது. அந்த போராட்டத்தின் போது பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது காவல்துறை முன்னிலையிலேயே ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சி வெளிவந்தது.


அதை தொடர்ந்து ஜெ.என்.யூ பல்கலைக்கழகத்திலும் வன்முறை நடைபெற்றது, இப்பொது வெளிவந்த அம்னெஸ்டியின் அறிக்கை இந்த கலவரங்களை நேரடியாக பார்த்த பொதுமக்களை வைத்தும் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் மக்களின் காணொளிகளை அடிப்படையாக வைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் டெல்லி காவல்துறையினர் போராடிய மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக அறிக்கை குற்றம்சாட்டுகிறது.


மேலும் அது தொடர்பான மனுக்களையும் காவல்துறை வாங்கவில்லை. அதை தொடர்ந்து ஜெ.என்.யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தாக்கிய குண்டர்கள் பற்றி 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொடுத்த புகார்களை பதிவு செய்தபோதிலும், டெல்லி காவல்துறை ஒரு முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.


ஆனால் இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெ.என்.யூ மாணவர் தலைவர் ஆயிஷி கோஷ் உட்பட சில CAA எதிர்ப்புக்குழுவினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.


மேலும் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார்கள் என பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிராக புகார்கள் கூறப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், ஒருவர் மீதும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


இந்த கலவரத்தில் அவசர தேவைக்காக டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடர்பு கொண்டபோது, காவல்துறையினர் அழைப்பை எடுக்கவில்லை என கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கூறியதாக கூறப்பட்டுள்ளது.


மேலும் காவலில் இருந்த பலர் துன்புறுத்தப்பட்டு போலியாக வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.


இப்படி பலவிவரங்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்ட சில பகுதி மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)