தமிழகத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: முகூர்த்த நாள் என்பதால் அழைப்பிதழுடன் சுற்றிய மக்கள்

கரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முகூர்த்த நாள் என்பதால், திருமண அழைப்பிதழ்களை காட்டி ஏராளமானோர் வாகனங்களில் சென்றனர்.


அநாவசியமாக வெளியே சுற்றியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் 4-வது ஞாயிறான நேற்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.


இதையொட்டி, சென்னையில் மருந்து, பால் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருமழிசை காய்கறிச் சந்தை, மாதவரம் பழச்சந்தை, காசிமேடு மீன்சந்தை ஆகியவையும் செயல்படவில்லை. மாநகரம் முழுவதும் 193 இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து, அத்தியாவசியக் காரணங்கள் இன்றி வாகனங்களில் வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.


மீன், இறைச்சி பறிமுதல் ஊரடங்கையும் மீறி பல்வேறு நகரங்களிலும் இறைச்சி, மீன்கடைகள் செயல்பட்டன. இதை அறிந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். விதிகளை மீறி சில இடங்களில் மது விற்பனையும் நடந்தது.


ஆடி மாதம் முடிந்து, ஆவணி பிறந்துள்ள நிலையில், நேற்று முகூர்த்த நாள் என்பதால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றன. திருமண அழைப்பிதழ்களைக் காட்டி ஏராளமானோர் வாகனத்தில் சென்றனர். இதனால், சாலைகளில் வாகனங்கள் இயக்கம் நேற்று காலை அதிகமாக இருந்தது.


திருமண மண்டபங்களிலும் ஓரளவு மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. பிற்பகலுக்கு பிறகு சாலைகள் வெறிச்சோடின. புதுச்சேரி நோக்கி.. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று இ-பாஸ் நடைமுறையும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மது குடிக்க புதுச்சேரி நோக்கி சென்றனர். அவர்களை புதுச்சேரி போலீஸார் மாநில எல்லையில் மடக்கி திருப்பி அனுப்பினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)