சென்னை மண்டலத்தில் வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை July 04, 2020 • M.Divan Mydeen தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் போக்குவரத்து தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் கண்ணன் கூறியதாவது:- சென்னை உள்ளே வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்கலாம். சென்னை மண்டலம் உள்ளே இயங்க இ-பாஸ் தேவையில்லை. போலி இ-பாஸ் தகவல் கிடைக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் திங்கள் முதல் சிக்னல்கள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார். 6-ம் தேதி முதல் சென்னையில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்ன? சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் * டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும் * உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. * தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி. * வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம். * ஏற்கெனவே காலை 6 மணி வரை இரவு 8 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது * மறு உத்தரவு வரும்வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்.