மீண்டும் முழு ஊரடங்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன..
கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நாட்களில் வங்கிகள் 10 நாட்கள் மூடப்படும். கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்கப்படும். டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளான 21, 28ம் தேதிகளில் மக்கள் வெளியில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊாடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில், ஊரடங்கு நீடித்தாலும், கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்துப்பப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், பால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியது. ஆனாலும், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவில் கூடி வருவதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி சுமார் 1,500ஐ தாண்டும் நிலை ஏற்பட்டது.
உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து இந்த 4 மாவட்டங்களிலும் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களிடம் பரவலாக பேச்சு எழுந்தது. ஆனாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக, முழு ஊரடங்கை மீண்டும் அறிவிக்க கூடாது என்றும் மக்கள் கருதினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மருத்துவ குழுவினரும், நோய் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் தளர்வுகளை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மதியம் 1 மணிக்கு நடந்தது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உ முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சரவை கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், வருகிற 19ம் தேதி (நாளை மறுதினம்) முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ் சிபுரம் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூந்தமல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இருப்பினும் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது..
21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த இரண்டு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறி உள்ளார்.
1. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.
2. வாடகை ஆட்டோ , டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
3. மாநில அரசு துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்களில் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அமைதிக்கப்படும்.
5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வர தேவையில்லை.
6. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள், அது சம்பந்தப்பட்ட வங்கி பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.
7. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோக திட்டத்திற்கான போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொது விநியோக கடைகள் இயங்காது. அவர்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்கப்படும்.
9. காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.
10. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும்.
11. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
12. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
13. பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.
14. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு அனுமதி.
15. நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுமதி.
16. பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களை கொண்ட கட்டுமான பணி அனுமதிக்கப்படும்.
17. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒருமுறை முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்கு சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒருமுறை பிசிஆர் பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும். இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
18. சரக்கு போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் " வாகனங்களுக்கும் தடை கிடையாது.
19. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இபாஸ் அனுமதி வழங்கப்படும்.
20. வெளி மாநிலத்தில் இருந்து வருகிற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளிநாட்டில் இருந்து வருகிற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.
104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் போர் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். ஊரடங்கை அமல்படுத்தினாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்