நோய் தொற்று பரப்பும் வகையில் சாலையில் கவச உடையை வீசும் மாநகராட்சி ஊழியர்..

புழல்: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் மற்றும் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி, அனைவருக்கும் கவச உடை வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கவச உடையணிந்து பணிபுரிபவர்கள் அதனை உரிய முறையில் அப்புறப்படுத்த வேண்டும், என உத்தரவிடப்பட்டது. ஆனால், பலர் பயன்படுத்திய கவச உடையை பொது இடங்களில் வீசி செல்வது தொடர்கிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் கன்னடபாளையத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரை அடக்கம் செய்துவிட்டு திரும்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர், தான் அணிந்திருந்த கவச உடையை கழற்றி பாதுகாப்பற்ற முறையில் சாலையில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது, வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்த மாநகராட்சி ஊழியர் ஒருவர், தான் அணிந்திருந்த கவச உடை மற்றும் முகக்கவசத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சுடுகாட்டின் அருகே சாலையில் வீசிவிட்டு செல்கிறார்.


இதனால், புழல் கன்னடபாளையம், மகாலட்சுமி நகர், சக்திவேல் நகர், இந்திரா நகர், தனலட்சுமி நகர், மகாவீர் கார்டன், திருநீலகண்ட நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)